தங்களுடைய 3 குழந்தைகளுக்கு பார்வை பறி போவதையறிந்து உலக சுற்றுலா அழைத்து சென்ற பெற்றோர்! நெகிழ்ச்சி சம்பவம்

0
96

தங்களுடைய 3 குழந்தைகளுக்கு பார்வை பறி போவதையறிந்து உலக சுற்றுலா அழைத்து சென்ற பெற்றோர்! நெகிழ்ச்சி சம்பவம்

கனடாவை சேர்ந்த செபாஸ்டியன் பெல்டியர் மற்றும் எடித் லேமே தம்பதியினர் குழந்தைகளுடன் உலகம் முழுவதும் சுற்றி பார்ப்பதற்காக சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்களின் இந்த பயணத்திற்கான காரணம் தான் கேட்கும் பலரையும் சோகத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

இந்த தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இதில் மூன்று குழந்தைகள் ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்ற அரிய வகை கண் குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மரபணு ரீதியாக ஏற்படும் மாற்றம் ஆகும். இதனால் கண்களின் வெள்ளை விழிப்பகுதி மொத்தமாக பாதிக்கப்படும். இந்த பாதிப்பிற்கு முழுமையாக சிகிச்சை இல்லை.

இவர்களின் மூத்த குழந்தையான மியாவுக்கு மூன்று வயதில் இருக்கும் போது இந்த நோய்க்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன. அதன்பிறகு, அவர்களின் மற்ற குழந்தைகளான கொலின் (இப்போது 7) மற்றும் லாரன்ட் (இப்போது 5) உள்ளிட்டோரும் அதே பாதிப்புடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இப்போது 9 வயதாக இருக்கும் லியோ மட்டுமே இந்த நோய் பாதிப்பிலிருந்து தப்பித்துள்ளார். ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா நோய் பாதிப்புக்கு எந்தவிதமான சிகிச்சையும் இல்லை. இதனால் வருங்காலத்தில் அந்த குழந்தைகளுக்கு பார்வை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அவர்களின் குடும்பம் மொத்தமாக உலகத்தை சுற்ற முடிவு செய்து அதற்கான பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

வீட்டில் உள்ள மற்ற 3 குழந்தைகளுக்கும் பார்வை பறிபோவதற்கு முன்பாக இந்த பயணத்தை மேற்கொள்ள அவர்களின் குடும்பம் முடிவு செய்தது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் இவர்கள் தங்கள் பயணத்தை தொடங்கினார்கள். தற்போது வரை அவர்கள் பல நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அடுத்ததாக விரைவில் அவர்கள் இந்தோனேசியாவிற்கு பயணம் செல்ல முடிவு செய்துள்ளனர். அதன் பிறகு ரஷ்யா, சீனா மற்றும் இந்தியாவிற்கும் வரும் முடிவில் உள்ளனர்.

இது குறித்து பெல்டியர்- எடித் தம்பதி கூறுகையில், “நீங்கள் உண்மையில் எதுவும் செய்ய முடியாது. இந்த பாதிப்பு எவ்வளவு வேகமாகப் போகிறது என்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் அவர்கள் வாழ்க்கையின் நடுப்பகுதியில் முற்றிலும் பார்வையற்றவர்களாக இருப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

நான் அவர்களுக்கு ஒரு புத்தகத்தில் யானையைக் காட்டப் போவதில்லை, உண்மையான யானையைப் பார்க்க அவர்களை அழைத்து செல்லப் போகிறேன். அவளுடைய காட்சி நினைவில் என்னால் இயன்ற சிறந்த, அழகான படங்களால் நிரப்பப் போகிறேன்” என்று தெரிவித்தனர்.