இன்று பொன்னியின் செல்வன் டீசர்…. ஐந்து மொழிகளில் ஐந்து சூப்பர் ஸ்டார்கள் ரிலீஸ்!

0
85

இன்று பொன்னியின் செல்வன் டீசர்…. ஐந்து மொழிகளில் ஐந்து சூப்பர் ஸ்டார்கள் ரிலீஸ்!

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் இன்று 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

எழுத்தாளர் கல்கியின் வரலாற்றுப் புனைவு நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக பிரம்மாண்டமாக எடுக்கப்படுகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படம் 2 பாகங்களாக தயாராகி உள்ளது. இதற்கு முன்னதாக இந்த நாவலை இரண்டு முறைப் படமாக்க எம் ஜி ஆர் முயன்றார். ஆனால் அது கைகூடவில்லை.

மணிரத்னம் தன்னுடைய கனவுப் படைப்பாக உருவாக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.மேலும் இந்த படத்திற்காக இவர்கள் பல்வேறு விதமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர் . ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே முழுவதுமாக நிறைவடைந்து விட்டது .

இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வீடியோ கிளிம்ப்ஸ் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘வருகிறான் சோழன்’ என்ற கேப்ஷனோடு வெளியாகியுள்ள இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதையடுத்து கதையின் முக்கியக் கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் இன்று மாலை பொன்னியின் செல்வன் டீசர் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. ஐந்து மொழிகளிலும் 5 பிரபலங்கள் இந்த டீசரை வெளியிட உள்ளனர். இந்தியில் அமிதாப் பச்சனும், தெலுங்கில் மகேஷ் பாபுவும், கன்னடத்தில் ரக்‌ஷித் ஷெட்டியும், மலையாளத்தில் மோகன் லாலும், தமிழில் நடிகர் சூர்யாவும் வெளியிட உள்ளனர். இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா வெளியிட்டுள்ளது.

Ponniyin selvan teaser to be unveiled by superstars