உதவி தேடி தவித்த தமிழக அரசு : தானாக முன்வந்த தனியார் நிறுவனம்!

0
65

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவை வரும் மே 3ஆம் தேதி வரை நீடித்துள்ளது. மேலும் இந்த இரண்டாம் கட்ட ஊரடங்கு காலத்தில் தான் நாம் மிகவும் கவனமாக இருந்து நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் வெல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுகாதாரத்துறையினர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களை கண்டுபிடிப்பதும் அவர்களுக்கு சிகிச்சை வழங்குவதிலும் அக்கறை காட்டி வருகின்றனர். இந்த நோய் தொற்று பரிசோதனைகளை செய்ய துரித பரிசோதனை கிட்டுகள் இல்லாததால் அந்த வேலைகள் சற்று தாமதமாக நடந்து வந்தன.

இதற்கிடையில் தமிழக முதல்வர் பழனிசாமி பொதுமக்களிடம் சிறிய தொகையாக இருந்தாலும் நிவாரண உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் நோய் அறிகுறிகள் உள்ளவர்களை பரிசோதனை செய்ய தனியார் நிறுவனங்களிடம் துரிதமாக பரிசோதனை செய்யும் ரேப்பிட் கிட்டுகளை வழங்கும்படி கேட்டிருந்தார்.

இந்தநிலையில் டாட்டா நிறுவனம் தமிழக அரசிற்கு 8 கோடி மதிப்பிலான ரேப்பிட் கிட்டுகளை கொடுத்து உதவியுள்ளது. அதில் சுமார் 42,032 எண்ணிக்கையிலான கிட்டுகள் அடங்குகிறது, இதன் மூலம் தமிழக அரசு பரிசோதனை வேலைகளை துரிதப் படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

டாட்டா நிறுவனம் வழங்குவதாக அறிவித்த 8 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக டாடா நிறுவனம் 1500 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு நிவாரணத் தொகையாக அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K