மழை வெள்ள பாதிப்பு! டெல்டா மாவட்டங்களில் நாளை பார்வையிடும் ஓபிஎஸ் இபிஎஸ்!

0
111

மழைக்காலம் என்று வந்துவிட்டாலே அரசியல்வாதிகளுக்கு அரசியல் செய்வதற்கு வேறு விஷயமே தேவைப்படாது என்று ஒரு சிலர் தெரிவித்தாலும், இந்த மழைக் காலங்களில் தான் அமைச்சர்கள் முதல் முதலமைச்சர் வரையில் பொதுமக்களை நேரடியாக சந்திக்கும் ஒரு பொன்னான காலமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

ஏனென்றால் மற்ற சமயங்களில் அமைச்சர்களும், முதலமைச்சரும், சாதாரண பொதுமக்களை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சந்திப்பது இல்லை. ஆனால் இந்த மழைக்காலங்களில் மட்டும் எதிர்க்கட்சியினரின் வாயை அடைக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவாவது சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல பாதிப்புகளை பார்வையிடுவார்கள். அதன் மூலம் பொதுமக்கள் அவர்களிடம் தங்களுடைய கோரிக்கையை முன் வைப்பார்கள்.

அதோடு அதில் ஒரு சில கோரிக்கைகளை அரசியல்வாதிகள் நிறைவேற்றியும் தருவார்கள் அதோடு பொதுமக்களுக்கு ஆளும் தரப்பு என்ன தான் உதவி புரிந்தாலும் அதனை எதிர்க்கட்சி எப்போதும் குறை சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறது. இது எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உதாரணமாக, அதிமுக ஆட்சிக்காலத்தில் மழை வெள்ள சமயங்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அப்போது ஆட்சியாளர்கள் பொதுமக்களை சந்தித்து உதவிகளை புரிந்து இருந்தாலும் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் அவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அதாவது ஏதோ பெயருக்கு வந்து பார்வையிடுவது, ஒரு சிலருக்கு உதவி புரிவது, கேள்வி கேட்டால் கூட பதில் சொல்லாமல் சென்று விடுவது, போன்ற கண்துடைப்பு வேலைகளில் ஆளும்கட்சி இறங்கியிருக்கிறது என அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆனால் தற்போது முந்தய ஆட்சிக்காலத்தில் அதிமுக எதையெல்லாம் செய்ததோ அதையேதான் தற்சமயம் முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலின் அவர்களும் செய்து வருகிறார்.

இந்த நிலையில், சென்ற வாரம் சென்னையில் பெய்த மழையின் காரணமாக, தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது மழை நின்றும் வெள்ள நீர் வடியாத சூழ்நிலை பல பகுதிகளில் காணப்படுகிறது, இந்த சூழ்நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணைய ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக வின் சார்பாக நிவாரணம் வழங்கி வருகிறார்கள்.

அந்த விதத்தில், நாளையதினம் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய பகுதிகளையும் வெள்ள நீர் காரணமாக, ஏற்பட்ட பாதிப்புகளையும் ஓபிஎஸ் இபிஎஸ் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட இருக்கிறார்கள்.