மீண்டும் வந்த சசிகலா! நடுநடுங்கும் அரசியல் கட்சிகள்!

0
80

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 2017 ஆண்டு பிப்ரவரி மாதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறைக்கு சென்றார். அவர் சிறைக்கு சென்றதை அடுத்து தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றது.அதாவது எலியும் பூனையுமாக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கைகோர்த்து ஒன்றாக இணைந்தார்கள். அதன் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர்.

இதனை எதிர்த்து சசிகலா சிறையில் இருந்தபடியே வழக்கு தொடர்ந்தார். அது ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் மறுபுறம் சென்ற ஜனவரி மாதம் 27 ஆம் தேதி சசிகலா நான்கு வருட கால சிறை தண்டனை முடிந்து விடுதலையானார்.அவர் தமிழ்நாட்டிற்கு வந்தவுடனேயே தீவிர அரசியலில் இறங்குவார், அதிமுகவை தன்வசம் படுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டு வந்திருந்தது. இந்த நிலையில்,, சசிகலா திடீரென்று அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பானது அவருடைய ஆதரவாளர்கள் மத்தியிலும், டிடிவி தினகரன் மத்தியிலும், மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு அவர் தன்னுடைய சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்று தன்னுடைய குலதெய்வம் கோவிலில் வழிபாடு செய்தார். அதன் பின்பு தன்னுடைய ஆன்மீக சுற்றுலாவை தொடங்கியிருக்கிறார். இந்த பயணத்தின் போது அவருடைய ஆதரவாளர்கள் பலரும் அவரை சந்தித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், சென்னை வந்த சசிகலா போயஸ் கார்டன் பகுதியில் கட்டப்பட்டு வரும் தன்னுடைய புதிய இல்லத்தை பார்வையிட்டு இருக்கிறார். தன்னுடைய தோழியான ஜெயலலிதா அவர்களின் அரசியல் பயணம் ஆரம்பித்த அதே போயஸ் கார்டன் பகுதியில் இருந்து சசிகலா அரசியல் பயணமும் தொடங்குகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. அதற்காகவே அவசரஅவசரமாக ஒரு மிகப்பெரிய வீட்டை அவர் கட்டி வருவதாக சொல்லப்படுகிறது.

பொதுவாக ஜெயலலிதா உயிருடன் இருந்த சமயத்தில், அரசு சம்பந்தமாகவோ அல்லது கட்சி சம்பந்தமாகவோ எந்த ஒரு முக்கிய அறிவிப்பாக இருந்தாலும் அதனை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து தான் வெளியிடுவார்.அதன் காரணமாகவே, அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் தமிழகத்தின் அரசியல் மையமாகவே மாறிப்போனது.

இதனை மனதில் வைத்துதான் சசிகலா போயஸ் கார்டன் பகுதியில் தனக்கென ஒரு புதிய இல்லத்தை வடிவமைக்க தொடங்கியிருக்கிறார் என்றும், அதில் இருந்தே அவர் அரசியல் பிரவேசத்தை தொடங்குவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் தமிழகத்தின் பல முக்கிய அரசியல் கட்சிகள் பீதியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.