மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்த வைகோ!

0
70

தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவிற்கு  அமித் ஷா ஹிந்தியில் கடிதம் எழுதி இரங்கல் தெரிவித்தார்.மேலும் இது கடுமையான சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இதற்கு பலர் கட்டணம் தெரிவித்து வரும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆணவபோக்கை இது காட்டுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அதாவது இதைப்பற்றி வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளார்.

“அண்மைக்காலமாக தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, நடுவண் அமைச்சர்கள் இந்தியில்தான் கடிதங்கள் எழுதி வருகின்றார்கள். தங்களுடைய முகநூல், ட்விட்டர் போன்ற வலைதளப் பக்கங்களிலும், இந்தியில் மட்டுமே எழுதி வருகின்றார்கள். இந்தப் போக்கு தமிழுக்கு மட்டும் அல்ல, அனைத்து இந்திய மொழிகளுக்கும் எதிரானது. எங்கள் ஆட்சி, இந்திக்காரர்களுக்கு மட்டும்தான் என்பதைக் காட்டுகின்றது.

எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்; தமிழர்களின் உணர்வுகளை மதிக்க மாட்டோம்; நாங்கள் சொல்வதைத்தான் தமிழர்கள் கேட்க வேண்டும்.

நாங்கள் எழுதுவதைத்தான் தமிழர்கள் படிக்க வேண்டும் என்கின்ற ஹிந்தி ஆதிக்க வெறி இந்தியாவைக் கூறுபோட்டு விடும் என்பதை, பாஜக ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. எனக்கு இந்தி தெரியாது; எனவே, உங்கள் கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதி அனுப்புங்கள் என்று கூறி, அந்தக் கடிதத்தை, எடப்பாடி பழனிச்சாமி, அமித் ஷாவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். இல்லையேல், இனி அவர் அனைத்துக் கடிதங்களையும் இந்தியில்தான் எழுதி அனுப்புவார். அதைத்தடுத்து நிறுத்த வேண்டியது, தமிழக முதல் அமைச்சரின் கடமை” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் வைகோ.

author avatar
Parthipan K