கோலி, சூர்யகுமார் அபாரம்… கடைசி ஓவரில் த்ரில் வெற்றி – சாதனை வெற்றியோடு கோப்பையை வென்ற இந்தியா

0
81

கோலி, சூர்யகுமார் அபாரம்… கடைசி ஓவரில் த்ரில் வெற்றி – சாதனை வெற்றியோடு கோப்பையை வென்ற இந்தியா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடந்த டி 20 போட்டியில் இந்தியா த்ரில் வெற்றியைப் பெற்றுள்ளது.

3 போட்டிகள் கொண்ட தொடரில் வாழ்வா சாவா என்ற இறுதிப் போட்டி நேற்று ஐதராபாத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன் படி களமிறங்கிய ஆஸி. அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேமரான் க்ரின் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ஆனால் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால் அந்த அணி ஒரு கட்டத்தில் தடுமாற தொடங்கியது. இதையடுத்து கடைசி கட்டத்தில் அந்த அணியின் டிம் டேவிட் மற்றும் டேனியல் சாம்ஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடி ஸ்கோரை 187 ரன்களாக்கினர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன் பின்னர் வந்த கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் நிலைத்து நின்று ஆடினர். ஒரு கட்டத்தில் அதிரடியில் புகுந்த சூர்யகுமார் யாதவ்,36 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு கோலியோடு, ஹர்திக் பாண்ட்யா இணைந்து இலக்கை நோக்கி விளையாடினர்.

கடைசி ஓவரில் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி அவுட் ஆனார் கோலி, அதன் பின்னர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் இறுதி ஓவரின் 5 ஆவது பந்தில் இலக்கை எட்டி வெற்றியை தன் வசமாக்கினர். இந்த வெற்றியின் மூலம் தொடரை வென்றது மட்டுமில்லாமல் இந்த ஆண்டுல் 21 ஆவது வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளது. இதன் மூலம் எந்தவொரு அணியும் படைக்காத சாதனையை படைத்துள்ளது.