சாம்பார் கொடுக்காத காரணத்தினால் பறிப்போன உயிர் – அதிர்ச்சி சம்பவம்!!

0
156
#image_title

சாம்பார் கொடுக்காத காரணத்தினால் பறிப்போன உயிர் – அதிர்ச்சி சம்பவம்!!

செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் பகுதியினை சேர்ந்தவர் சங்கர், இவரது மகன் அருண்குமார். இவர்கள் இருவரும் சென்னை பம்மல் எனும் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு இவர்கள் இட்லி பார்சல் செய்து வாங்கியுள்ளனர். ஹோட்டல் மேற்பார்வையாளர் அருணிடம் கொஞ்சம் கூடுதலாக சாம்பார் தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு அவர் “நீங்கள் வாங்கிய இட்லிக்கு கூடுதலாக எல்லாம் சாம்பார் கொடுக்க முடியாது” என்று கூறியதாக தெரிகிறது.

இதன் காரணமாக தந்தையும் மகனும் ஹோட்டல் மேற்பார்வையாளர் அருண்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த சிறிது நேரத்திலேயே இவர்களுக்கு இடையே நேர்ந்த வாக்குவாதம் தகராறாக மாறியுள்ளது. இந்த தகராறில் தந்தை மகன் இருவரும் இணைந்து அருணை தாக்கியுள்ளனர் என்று தெரிகிறது. அவர்கள் தாக்கியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அருண் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அதன்படி, இந்த சம்பவம் குறித்து உடனடியாக அப்பகுதி காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அத்தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அருணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த தனியார் ஹோட்டல் நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அருணை தாக்கிய தந்தை மகனான சங்கர் மற்றும் அருண்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த அருணுக்கு அண்மையில் தான் திருமணம் நடந்தது என்ற தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு சாம்பார் கொடுக்காத காரணத்தினால் ஒரு உயிரே பறிபோன சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.