குடிப்பழக்கத்தால் இப்படியெல்லாம் நடக்குமா? சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

0
80

குடிப்பழக்கத்தால் இப்படியெல்லாம் நடக்குமா? சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

சென்னைக்கு அருகேயுள்ள செங்கல்பட்டு பகுதியில் 5 வருடமாக காதலித்து வந்த காதலன் மது போதைக்கு அடிமையானவர் என்பது தெரிந்ததால் வேறு நபருடன் காதலி நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் மது மற்றும் போதையால் ஏற்படும் குற்றங்கள் மற்றும் விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.தொடர்ந்து மதுக்கடைகளுக்கு எதிராக பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து கொண்டுள்ளனர்.

இப்படி ஒருபுறம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வரும் நிலையில் மறுபுறம் மது போதையின் காரணமாக ஏற்படும் குற்ற சம்பவங்களும் கணிசமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பள்ளி மாணவர்களே மது போதையில் தள்ளாடும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

மதுப்பழக்கம்

இது ஒருபுறம் இருக்க குடும்ப ரீதியான உறவுகளும் இந்த கொடிய மது பழக்கத்தால் சிதைந்து வருகிறது. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் தொடர்ந்து சண்டை ஏற்பட இந்த மதுப்பழக்கம் காரணமாக அமைந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் இளம் விதவைகள் அதிகமாக இருக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு காரணமும் மதுவே என்று ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் காதலன் மது குடிப்பார் என தெரிந்ததால் வேறு ஒருவருடன் இளம்பெண் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நிலையில் மனமுடைந்த அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வர். இவர் அருகிலுள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

காதல் திருமணம்

மகேஸ்வர் சிறுவயதில் இருந்தே தனது உறவுக்கார பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.அந்த பெண்ணும் இவரை காதலித்துள்ளார். மகேஸ்வர் நல்ல வேலையில் இருப்பதாலும், உறவினர்கள் என்பதாலும் இருவீட்டு பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மகேஸ்வர் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இது குறித்து கேட்டபோது வேலையை தான் ராஜினாமா செய்து விட்டதாகவும் விரைவில் வேலைக்குச் சென்று விடுவேன் என கூறியுள்ளார்.

இந்த நிலையில் தான் மகேஸ்வரக்கு மதுப்பழக்கம் இருந்ததும், அதனால் தான் வேலை இழந்ததும் தெரிய வந்தது. மேலும் பகல் நேரங்களிலேயே மகேஸ்வர் குடித்துவிட்டு வந்ததை அறிந்த அந்த பெண்ணும் அவரது பெற்றோர்களும் திருமணத்தை நிறுத்தி உள்ளனர்.

இளைஞர் தற்கொலை

ஏற்கனவே வேலை பறிபோனதால் மன உளைச்சலில் இருந்த மகேஸ்வர் இதனால் மேலும் உடைந்து போயிருக்கிறார். இதனிடையே அந்த பெண்ணுக்கு வேறு ஒரு மணமகனுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது.

இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மகேஸ்வர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.