கிருஷ்ணகிரியில் ஆணவக் கொலை!! மகனைக் கொலை செய்த தந்தை மருமகள் பலத்த காயம்.. தடுத்த பாட்டியும் வெட்டிக் கொலை!!

0
205
#image_title

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கலப்புத் திருமணம் செய்த மகனை கொலை செய்த தந்தையை போலீஸார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவத்தை தடுக்க வந்த பாட்டியும் வெட்டிக் கொல்லப்பட்டார். மருமகள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் குடும்பத்துடன் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

மகன் சுபாஷ் (28) திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அங்கு வேலை செய்தபோது, அரியலூர் மாவட்டம் ஜெயக்கொண்டம் பகுதியை சேர்ந்த அனுசுயா (25) என்பவரை காதலித்து வந்தார். சுபாஷ் மற்றும் அனுசுயா இருவரும் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

இதனால் சுபாஷின் தந்தை தண்டபாணி, இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். அனுசுயாவின் வீட்டில் காதலுக்கு சம்மதம் தெரிவித்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி சுபாஷ், அனுசுயா ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர், 2 பேரும் திருப்பத்தூர் மாவட்டத்தில் குடியேறினர். சுபாஷ் திருப்பத்தூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மகன் காதல் திருமணம் செய்ததால், ஆத்திரத்தில் இருந்த தண்டபாணி, தனது தாய் கண்ணம்மாளிடம், ‘உனது பேரனை வீட்டிற்கு விருந்திற்கு வரவழைத்து சமாதானம் பேசிக் கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார். பாட்டி கண்ணம்மாள் தான் சுபாஷின் காதலுக்கு முழு ஆதரவு தெரிவித்து வந்துள்ளார். மேலும், காதல் திருமணம் செய்த பேரனுக்கு வாடகை வீடு பார்த்தும் கொடுத்துள்ளார்.

தண்டபாணி சொன்னதை நம்பிய கண்ணம்மாள், தனது பேரன் சுபாஷ், அவரது மனைவி அனுசுயா ஆகியோரை தமிழ் புத்தாண்டுக்கு அருணபதியில் உள்ள தனது வீட்டிற்கு வருமாறு அழைத்து உள்ளார். இந்நிலையில், தம்பதியினர் நேற்று ஊத்தங்கரை அருகே உள்ள அருணபதி கிராமத்தில் உள்ள பாட்டி கண்ணம்மாள் வீட்டிற்கு வந்துள்ளனர்.

இதையடுத்து, அங்கே இரவு உணவு முடித்துவிட்டு தங்கியுள்ளனர். அங்கு ஏற்கெனவே வந்திருந்த தண்டபாணி, இருவரிடமும் சகஜகமாக பேசியுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில், தண்டபாணி கூர்மையான கத்தியால் தனது மகனை வெட்டியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு எழுந்த பாட்டி கண்ணம்மாள், மனைவி அனுசுயா ஆகியோர் தடுத்துள்ளனர்.

அப்போது, தனது தாய் கண்ணம்மாளையும் வெட்டிய தண்டபாணி, மருமகள் அனுசுயாவையும் துரத்தி துரத்தி வெட்டியுள்ளார். இதில், அனுசுயா மயக்கம் அடைந்ததால், உயிரிழந்துவிட்டதாக நினைத்து தண்டபாணி அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த அனுசுயா வீட்டிற்குள் சென்று அங்கிருந்து செல்போனை எடுத்துக்கொண்டு ஊருக்குள் செல்லும்போது,100 அடி தூரத்தில் சாலையோரம் மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில், காலை 6 மணியளவில் கிராம மக்கள் அவ்வழியே செல்லும்போது, ரத்தக் காயங்களுடன் கிடந்த அனுசுயாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இக்கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த, ஊத்தங்கரை டிஎஸ்பி அமலா அட்வின் மற்றும் போலீஸார், நிகழ்விடத்தில் வந்து சுபாஷ், கண்ணம்மாள் ஆகியோரது சடலங்களை மீட்டு உடற்கூறாய்விற்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீஸார், தண்டபாணி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை, கொலைமுயற்சி உட்பட 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 2 தனிப்படை அமைக்கப்பட்டு, தலைமறைவாக உள்ள தண்டபாணியை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த ஆணவக்கொலை சம்பவம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
Savitha