இதே தன்மையோடு தான் வாழ்நாள் முழுவதும் செயல்படுவேன்! முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சி!

0
167

அம்மா கிளினிக்குகளை மூடி விட்டோம், அம்மா உணவகத்தை நாங்கள் கவனிக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் பட்டியலிட்டார். இதுபோன்ற பட்டியலை படிக்க வேண்டும் என்றால் என்னிடம் நிறையவே உள்ளது என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தலைவர் கருணாநிதியால் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் மிகப்பெரிய சட்டமன்ற தலைமைச் செயலக வளாகம் கட்டப்பட்டு அது அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. அந்த இடத்தில்தான் சட்டமன்றம் நடைபெற்றது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் சட்டமன்றம் நடந்த இடத்தை மருத்துவமனையாக மாற்றியது யார்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அண்ணா நூற்றாண்டு விழா நினைவாக 170 கோடி மதிப்பீட்டில் 8 மாடி அளவில் கட்டப்பட்ட மிகப்பெரிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற முயற்சி செய்ததும், பராமரிக்காமல் வைத்ததும் யார்? என்றும்? அங்கு இருந்த அண்ணாவின் சிலையின் கீழே இருந்த கருணாநிதி பெயரை மறைத்தது யார்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இவ்வாறு வரிசையாக மிக நீண்ட நேரம் என்னால் தெரிவிக்க இயலும், பல கேள்விகளை கேட்கவும் இயலும். இதையெல்லாம் நீங்கள் செய்தீர்கள் அதன்காரணமாக, நாங்கள் செய்தோம் என்று நான் சொல்லவில்லை, அப்படி நடந்துகொள்ள வேண்டிய எண்ணமும் எனக்கு ஏற்பட்டதில்லை அது ஏற்படவும் படாது என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் என்று தான் இன்றும் இருக்கிறது, தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் என்றுதான் இன்றும் இருக்கிறது, சென்னை உயர் கல்வி மன்றத்தில் அவருக்கு சிலை உள்ளது அவருடைய நினைவகம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அதை இந்த அரசு பராமரித்து கொண்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

அம்மா கிளினிக் என்று பெயர் வைத்தீர்கள் ஆனால் கிளினிக் இல்லை இல்லாத ஒன்றை எவ்வாறு இந்த அரசு மூட இயலும்? அம்மா உணவகம் மூடப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்கள். அவை முன்னவர் கூட கருணாநிதி பெயரில் இருந்த திட்டங்களை மாற்ற பட்ட ஆதங்கத்தில் ஒரு உணவகத்தை மூடினால் அதில் என்ன தவறு இருக்கிறது? என்று ஒரு கேள்வியை எழுப்பினார். என்னைப்பொறுத்தவரையில் நான் அப்படி நினைக்கவில்லை எந்த அம்மா உணவகமும் மூடப்பட கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம். அதன் காரணமாக, தான் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் அம்மா உணவகங்கள் தொடரும் என்று நான் அறிவிப்பு வெளியிட்டேன் என கூறியிருக்கிறார்.

இன்று வரையில் அந்த நிலைப்பாட்டில் தான் நான் இருக்கின்றேன், நிச்சயமாக இருப்பேன், அதில் எந்த விதத்திலும் மாற்றம் வராது என்பதை எதிர்க்கட்சி தலைவருக்கு நான் இந்த சமயத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். கவர்னர் உரை என்பது ஒரு ஆண்டிற்கு ஒரு முறை மாற்றப்படுவது அதன் காரணமாக, சென்ற கவர்னர் உரைக்கும் தற்போதைய உரைக்கும் 6 மாதம்தான் இடைவெளி இருக்கிறது. முந்தைய கவர்னர் உரை ஜூன் மாதம் 21ம் தேதி ஆற்றப்பட்டது. இரண்டிற்கும் இடைப்பட்ட காலம் மிகவும் குறைவுதான் என்று தெரிவித்திருக்கிறார்.

இருந்தாலும் இந்த இடைப்பட்ட காலத்தில் ஏராளமான சாதனைகளையும் நாங்கள் புரிந்து இருக்கின்றோம், ஏராளமான சோதனைகளையும் நாங்கள் சந்தித்து இருக்கிறோம், சமாளித்து இருக்கிறோம், நோய்தொற்று என்ற மிகப்பெரிய பெரும் தொற்று காலத்தில் ஆட்சிக்கு வந்தோம், போர்க்கால அடிப்படையில் இதன்காரணமாக, நோய்க்கு முற்றுப்புள்ளி வைத்தோம். இந்த நிலையில்தான் வரலாறு காணாத மழை, வெள்ளம், என்ற இயற்கை பேரிடர் நம்மை சூழ்ந்து கொண்டது. அதற்காக நிவாரணப் பணிகளையும் மின்னல் வேகத்தில் நாங்கள் செய்து கொடுத்தோம் என தெரிவித்திருக்கிறார்.

தேர்தலுக்கு முன்பு நாம் பெற்றிருக்கக் கூடிய நம்பிக்கையை விட தற்சமயம் பலமடங்கு நம்பிக்கையை பொதுமக்களிடையே இந்த அரசு பெற்றிருக்கிறது என்பதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உடைய மனசாட்சி கூட மறுத்து பேசாது என்பதை நான் நம்புகிறேன். பொது மக்களுக்கு உண்மையாக இருந்தோம் அதன் காரணமாக, பொது மக்களிடம் நன்மதிப்பை பெற்று இருக்கிறோம். இதே உண்மை தன்மையுடன் தான் நான் என்னுடைய வாழ்நாள் முழுவதும் செயல்படுவேன் என்று திட்டவட்டமாக இந்த மாமன்றத்தில் உறுதி அளிக்கிறேன் என்று அவர் உரையாற்றி இருக்கிறார்.

Previous articleஇதற்கான அவசியம் தற்போது என்ன வந்தது? கூட்டுறவு சங்க கலைப்பு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சரமாரி கேள்வி!
Next articleஅரசின் சாதனைகளை சட்டசபையில் பட்டியலிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here