தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

0
81

தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பருவ மழை பல மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் வழக்கத்தை விட பருவ மழையின் அளவு அதிகமாகவே பதிவாகி இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன் தினம் முதல் மழை பெய்து வருகிறது.

சென்னையில் ஒரு சில இடங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் நேற்று முன் தினம் மாலை 3 மணி அளவில் பெய்த மழை சுமார் 3 மணி நேரமாக விடாமல் பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது.

மேலும் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்தும் சுமார் 3 மணி நேரமாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுவை, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், நாகை ஆகிய 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு பருவக் காற்று தொடர்ந்து வீசி வரும் காரணத்தால், தமிழகத்தில் மழை நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K