எடப்பாடி பழனிசாமி தற்குறி? பண்ருட்டி ராமச்சந்திரன் விமர்சனம்
கடந்த சில மாதங்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நீடித்து வருகிறது. இதில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே அதிகார போட்டி உச்சத்தை எட்டியுள்ளது. இது தொடர்பான வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.குறிப்பாக பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் உள்ள நிலையில் ஓபிஎஸ் நீதிமன்றத்தின் மூலமாக கட்சியை கைப்பற்ற முயற்சித்து வருகிறார்.
![Panruti Ramachandran slams edappadi palanisamy Panruti Ramachandran Criticise edappadi palanisamy](https://static-ai.asianetnews.com/images/01gd2smj7f0nyc7kyxj2zs9rbh/whatsapp-image-2022-09-16-at-2-50-21-pm_710x400xt.jpg)
அந்த வகையில் தனக்கு ஆதரவாக கட்சியின் நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அதன் அடிப்படையில் இதுவரை நியமித்த நிர்வாகிகளை அழைத்து இன்று சென்னையில் ஆலோசனை கூட்டமும் நடத்தியுள்ளார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசிய அவரின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் எம்ஜிஆர் தொடங்கிய இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்று தான் அனைவரும் இங்கு கூறியுள்ளனர். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆசி இங்குள்ளவர்களுக்கு தான் உண்டு என்று கூறியுள்ளார்.
முன்னதாக ஓபிஎஸ் அதிமுகவின் 75 மாவட்டங்கள் மற்றும் இதர அணிகளில் தனது ஆதரவு நிர்வாகிகளை நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக, மாவட்ட செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகளையும் அவர் தனக்கு ஆதரவாக நியமித்தார்.
மேலும் கட்சியின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனையும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவரால் நியமிக்கப்பட்ட 88 மாவட்டச் செயலாளர்கள் உட்பட 500 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கூட்டம் சென்னை ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
அப்போது அங்கு பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளதாவது, அதிமுகவில் உள்ள இடைச்செருகல்களை அப்புறப்படுத்த வேண்டும் என அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது பண்ருட்டி ராமச்சந்திரன் காட்டமாக விமர்சித்துள்ளார்.
மேலும் பேசிய அவர் காப்பியங்களில் செய்யுட்கள் வரும். அதை இயற்றியவர் ஆரம்பக்கால புலவராக இருப்பார். உதாரணத்துக்கு கம்பராமாயணத்தை எடுத்து கொள்வோம். உடனே இதை இயற்றியது சேக்கிழார் என்று அவசரப்பட்டு சொல்லிவிடாதீர்கள். இப்படியெல்லாம் தமிழ்நாட்டில் தற்குறிகள் இருப்பார்கள் என்று கருதியோ என்னவோ, ராமாணயத்தை ராமாயணம் என்று போடாமல் கம்பராமாயணம் என போட்டார்கள் என கிண்டலாக எடப்பாடி முன்பு பேசியதை தொடர்புபடுத்தி விமர்சித்துள்ளார்.