தந்தை மகன் உயிரிழந்த சம்பவம்! இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு!

0
69

தூத்துக்குடி: காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் சென்று தந்தை, மகன் பலியான சம்பவத்தை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக தமிழ்நாடு வணிக சங்க தலைவர் தா.வெள்ளையன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தாள்குளம் பகுதியில் ஜெயராஜ் என்பவர் மரக்கடை நடத்தி வந்தார். ஊரடங்கு நேரத்தை கடைபிடிக்காமல் கடையை திறந்து வைத்த காரணத்திற்காக தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்காக காவல்துறை அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது ஆசனவாய் வழியாக லத்தியை நுழைத்து கடுமையான முறையில் காவல்துறை நடந்துகொண்டதால் தந்தை, மகன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தை கண்டித்து அவரது உறவினர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தினர்.

இச்சம்பவத்தை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு கண்டன போராட்டம் நடத்துவதாக தமிழ்நாடு வணிக சங்கத்தலைவர் தா.வெள்ளையன் நேற்றே அறிவித்தார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவியும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும், இறப்பிற்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கை பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

author avatar
Jayachandiran