போருக்கிடையே போராட்டம் நடத்த உக்ரைன் அதிபர் அழைப்பு!

0
82

போருக்கிடையே போராட்டம் நடத்த உக்ரைன் அதிபர் அழைப்பு!

நேட்டோ நாடுகளில் உக்ரைன் சேர ஆர்வம் காட்டியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 24-ந் தேதி உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. நான்கு வாரங்களைக் கடந்து ரஷியா தொடர்ந்து வரும் உக்ரைன் மீதான தாக்குதலில் உக்ரைனின் பல முக்கிய நகரங்களை கைப்பற்றி உள்ளன ரஷிய படைகள். அதனை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கார்கிவ் மற்றும் மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் உக்ரைன், ரஷியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் இரு நாடுகளுக்கிடையே போர் நிறுத்தம் தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் அதில் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷிய ராணுவம் நடத்தி வரும் தீவிர தாக்குதலின் காரணமாக அச்சமடைந்த உக்ரைனிய மக்கள் 35 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர். இந்த நிலையில், ரஷியாவுக்கு எதிராக உலக அளவில் மக்கள் போராட்டம் நடத்தவேண்டும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்க உக்ரைன் அடையாளங்களுடன் இன்று (மார்ச் 24) முதல் உலக மக்கள் அனைவரும் அவரவர் இருக்கும் தெருக்கள், வீதிகளில் கூடி ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

author avatar
Parthipan K