போதையில் இந்து கடவுள்களை சேதம் செய்த இளைஞர்கள்.!! கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்.!!

0
92

த்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி கோயிலில் உள்ள கடவுளை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்ட இளைஞர்களை கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உச்சியில் அமைந்துள்ளது கம்பத்தராயன் கிரி திருக்கோயில். இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாத அனைத்து சனிக்கிழமைகளிலும் வழக்கமாக பூஜை நடைபெறும்.

இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள பசுவனாபுரம் பகுதியைச் சேர்ந்த 10 இளைஞர்கள் கம்பத்தராயன் கிரி மலையில் உள்ள கோவிலுக்கு சென்று மது அருந்தி விட்டு கோவிலில் உள்ள வேல் கம்புகளை எடுத்து சேதம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவேற்றி உள்ளனர். இந்த வீடியோவை கண்ட கடம்பூர் பகுதி மக்கள் இந்து கோவிலை அவமதிக்கும் படி நடந்துகொண்ட இளைஞர்களை கைது செய்யக்கோரி சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடம்பூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

ஆனால், காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் மெத்தனம் காட்டியதால் திடீர் சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடம்பூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியலால் கடம்பூர் சத்தியமங்கலம் சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.