சுரேஷ் ரெய்னா வீட்டில் இப்படிப்பட்ட இழப்பா?

0
65
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்  நட்சத்திர வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா போட்டி தொடரில் இருந்து விலகியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொந்த காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா நாடு திரும்பி விட்டதாகவும் அணியின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் பதன்கோட் மாவட்டத்தில் தரியல் கிராமத்தில் சுரேஷ் ரெய்னாவின் மாமா அசோக் குமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வசித்து வந்துள்ளனர். அசோக் அரசு ஒப்பந்ததாரராக இருந்துள்ளார். அவரது வீட்டுக்குள் புகுந்து கொள்ளைக்காரர்கள் தாக்கியுள்ளனர். இதில் ரெய்னாவின் மாமா உயிரிழந்துள்ளார். மேலும் 4 பேர் காயமடைந்து உள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், கடந்த 19-ம் தேதி இரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரெய்னாவின் மூத்த சகோதரர் சியாம் லால் கொல்லப்பட்டவர் ரெய்னாவின் மாமா என உறுதிப்படுத்தி உள்ளார். சம்பவம் நடந்த பொழுது வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர். கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திவிட்டு பணம் மற்றும் தங்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பியோடி உள்ளனர் என தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் அசோக் குமாரின் தாயார் சத்யா தேவி (80), மனைவி ஆஷா தேவி, மகன்கள் அபின் மற்றும் குஷால் ஆகியோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் சத்யா தேவி சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டார் என்று போலீசார் கூறியுள்ளனர்.