காவிரி விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து வரும் 5 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் – அமமுக அறிவிப்பு!!

0
44

காவிரி விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து வரும் 5 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் – அமமுக அறிவிப்பு!!

தமிழகத்தில் காவிரி பாசனப் பகுதிகளில் போதிய மழை இல்லாமல் குறுவைப் பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன.அவற்றை காப்பாற்ற வேண்டுமென்றால் காவிரிக்கு போதுமான தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும்.ஆனால் கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட மறுக்கிறது.காங்கிரஸ் கூட்டணி கட்சியான தமிழகத்தை ஆளும் திமுக இந்த விவகாரத்தில் அக்கட்சியின் செயலுக்கு துணை போவது தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலாகும்.ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு ஆட்சிக்கு வந்த பின் ஒரு பேச்சு என திமுக இரட்டை வேடம் போடுவதாக அமமுக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இரு மாநில அரசின் இந்த செயலைக் கண்டித்து அமமுக சார்பில் மன்னார்குடியில் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி மாலை 4 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் காவிரி நீரை நம்பி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியை செய்து வருகின்றனர். தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரிந்து வரும் நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட மாட்டோம் என்று கர்நாடக காங்கிரஸ் அரசு சொல்லிவருவதால் குறுவைப் பயிர்கள் வாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைப் பற்றி அக்கறை இல்லாமல் தேர்தல் கூட்டணி மட்டுமே முக்கியம் என்று சுயநல போக்குடன் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசையும்; டெல்டா விவசாயிகளின் ஜீவாதார பிரச்சினையாக உள்ள காவிரி விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் மக்கள் விரோத திமுக அரசையும் கண்டித்து அமமுக சார்பில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பெரியார் சிலை அருகில் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார்.

கர்நாடக காங்கிரஸ் அரசையும் மக்கள் விரோத திமுக அரசையும் கண்டித்து நடைபெறும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என்று இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.