தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு..இந்த மாவட்டங்களில் கனமழை- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

0
102

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் செய்தியாளர்களை வானிலை மைய இயக்குனர் புவியரசன் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் வரும் செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டு, விழுப்புரம், மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மற்றும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் கூறியுள்ளார்.

வரும் 13ம் தேதி அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், வரும் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோவையில் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்தமான் மற்றும் வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.