பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கு அதிர்ச்சி கொடுத்த முன்னாள் அமைச்சர்!

0
171

சசிகலா அதிமுகவை வைத்திருப்பதோடு, அந்த கட்சியின் தலைவர்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலம் போய் தற்சமயம் அதிமுகவிற்கும், சசிகலாவுக்கும், எந்தவிதமான தொடர்பும் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டு இருந்தாலும் அவர் மறைமுகமாக அதிமுகவை கைப்பற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், நேற்றைய தினம் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஓபிஎஸ் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து விட்டு சசிகலா தொடர்பான கேள்விகளுக்கு தரம் தாழ்ந்த முறையில் பதில் அளித்ததை குறிப்பிடும் வகையில், யாராக இருந்தாலும் மற்றவர்களை விமர்சனம் செய்யும்போது நாகரீகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தார். இது அதிமுகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ஓபிஎஸ் அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தற்சமயம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். சசிகலாவை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் ஒன்றாக கலந்து பேசி முடிவு எடுப்பார்கள் என ஓபிஎஸ் தெரிவித்திருந்தார், அதிமுகவில் எந்த காலத்திலும் சசிகலாவிற்கு இடமில்லை என அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடிபழனிசாமி மிகவும் திட்டவட்டமாக தெரிவித்து வருகின்ற சூழ்நிலையில், ஓபிஎஸ் அவர்களின் இந்த மாறுபட்ட கருத்து அந்த கட்சியில் புயலை கிளப்பி இருப்பதாக சொல்கிறார்கள்.

இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த சமயசத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு நடைபெற்ற சமயத்தில் தர்மயுத்தம் நடத்தி அதன் பிறகு கட்சியில் ஓபிஎஸ் இணையும்போது சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்கள் உடன் எந்த காலத்திலும், எந்த காரணத்தை முன்னிட்டும், எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ளாமல் இருந்தால் மட்டுமே நாங்கள் ஒன்றிணைவோம் என்று தெரிவித்து தான் கட்சியில் இணைந்தார். இதனை இந்த சமயத்தில் சொல்வதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

சசிகலா மற்றும் அவர் தொடர்புடையவர்களை எதிர்த்துதான் ஓபிஎஸ் தர்மயுத்தம் மேற்கொண்டார், ஜெயலலிதாவின் மறைவிற்கு நீதி கேட்டும், அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக தான் தர்மயுத்தம் நடத்துகிறேன் என தெரிவித்தார். அந்த நிலையை அதிமுக முன்னெடுத்த பின்னர் தான் அவர் கட்சியில் இணைந்தார் ஆகவே ஓபிஎஸ் அவர்களுக்கு இதனை நினைவு படுத்த வேண்டியது என்னுடைய கடமை என நினைக்கின்றேன் என தெரிவித்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் ஒரு சில கேள்விகளை அவரிடம் முன் வைத்தார்கள், அதற்கு அவர் பதில் தெரிவித்தார் அந்த கேள்விகள் வருமாறு, சசிகலா பக்கம் ஓபிஎஸ் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது என கேட்ட கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் யூகங்களுக்கும், அனுமானங்களும், தற்போது பதில் தெரிவிக்க இயலாது. என்னை பொறுத்தவரையில் கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதைத் தான் சொல்ல முடியும் என தெரிவித்து இருக்கிறார். அடுத்தபடியாக சசிகலா விவகாரத்தில் கட்சியில் ஒருமித்த கருத்து நிலவவில்லையா எழுப்பப்பட்ட கேள்விக்கு கட்சியின் பொதுக்குழு கூட்டியே சசிகலா நீக்கப்பட்டு விட்டார். அதுதான் தற்சமயம் முக்கியமாக இருக்கிறது ஓபிஎஸ் உட்பட எல்லோரும் கையெழுத்துப் போட்டு தானே இந்த முடிவை மேற்கொண்டார்கள். என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் தெரிவித்திருக்கிறார்.

அதோடு ஒருவேளை சசிகலாவுடன் தொடர்பு வைத்து கொண்டால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது ஜெயக்குமார் கூறியிருக்கிறார். அதாவது மறைமுகமாக பன்னீர செல்வத்தின் மீது கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார் என்றே கருதப்படுகிறது.

ஆரம்பத்திலிருந்தே சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ஓபிஎஸ் தற்சமயம் சசிகலா பக்கம் மெல்ல, மெல்ல, சாய்ந்து வருவதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தால் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் ஒருவேளை ஓபிஎஸ் அவர்களின் பெயரும் அடிப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது அதன் காரணமாக தான் அதனை முறியடிக்கும் விதத்தில் ஓபிஎஸ் சசிகலாவை இணைக்க முயற்சி செய்கிறார் என்ற கருத்தும் பரவலாக முன்வைக்கப்படுகிறது.

Previous articleசசிகலா தொடர்பான விமர்சனம்! எதிர்க்கட்சித் தலைவருக்கு மறைமுக கண்டனத்தை தெரிவித்த ஓபிஎஸ்!
Next articleதுணை நடிகை பலாத்கார புகார்! முன்னாள் அமைச்சர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here