சனாத ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!!
கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் “சனாதன ஒழிப்பு மாநாடு” நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் “சனாதன தர்மத்தை எதிர்க்கக் கூடாது. அதை ஒழிக்க வேண்டுமென்று பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியது.
பல்வேறு தரப்பில் இருந்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டனக் குரல் எழ ஆரமித்தது. உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சுக்கு பிரதமர் முதற்கொண்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனத்தை பதிவு பதிவு செய்தனர்.
இந்நிலையில் திராவிடக் கொள்கைக்கு எதிராகக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காட்டை சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கானது நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகோயோர் கலந்து கொண்டு பேசியதன் விளைவாக தற்பொழுது திராவிடக் கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு வழக்கு தொடரக் கூடிய நிலை ஏற்பட்டு இருக்கிறது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து எந்த மதத்திற்கும் எதிராக பேசுவதற்கு நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது. சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காமல் விட்டது காவல் துறை தன் கடமையை புறக்கணித்தது போன்று ஆகும். உயர் பதவியில் இருக்கும் ஒருவர் பொதுக் கூட்டம், பொது நிகழ்ச்சிகளில் பேசும் பொழுது சாதி, மதம் மற்றும் கொள்கை ரீதியாக பிளவு ஏற்படுத்தாதவாறு கவனத்துடன் பேச வேண்டும் என்று எச்சரித்தார்.
மேலும் குறிப்பிட்ட கொள்கை, இனத்தை ஒழிக்க வேண்டுமென்று பேசுவதற்கு பதிலாக மது உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிப்பதில் அமைச்சர்கள் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்தார். இதை தொடர்ந்து சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு மீது காவல் துறை முறையான நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். காவல் துறை மக்களுக்கானதே தவிர அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அல்ல என்று கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில் நீதிபதியே இவ்வாறு தெரிவித்து இருக்கும் நிலையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? என்ற எதிர்பார்ப்பு தற்பொழுது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.